தூத்துக்குடியில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் 3 நாட்கள் தொழில் கண்காட்சி- துடிசியா நிர்வாகிகள் பேட்டி
- தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது
- தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக துடிசியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்(துடிசியா) சங்க தலைவர் நேரு பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராஜ், சந்திர மோகன், சுப்புராஜ் இலையன்ஸ்ராஜா ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-
தொழில் கண்காட்சி
தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது.தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி உதவும்.
அதன்படி இந்த வருடம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
சிறு, குறு கனரக நிறுவனங்கள்
இதில் 180-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.
மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான அரங்குகள்மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
அரசு துறைகளான சிட்கோ, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம் போன்றவையும், தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, போன்ற வங்கிகளும் அரங்குகளை அமைக்கின்றன.
தொடக்க விழா
நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
கனிமொழி எம்.பி., சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.