கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை செய்த ஒடிசா வாலிபர் உட்பட 4 பேர் கைது
- 4 பேரை தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கஞ்சா விற்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், மது விலக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விருத்தாசலத்தில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோணு மகாராணா (வயது 28), திருப்பூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் சதீஷ் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், கம்மாபுரம் அருத்த சு.கீணனூர் கதிர்வேல் மகன் ராஜா (36), விருத்தாசலம் காசிம் பாஷா மகன் சதாம் (23) ஆகியோர் இவர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும், தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொண்டால், கடலூர் மாவட்டத்தில் யார்? யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்தனர் என்பதும், வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளனரா என்பது தெரிவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.