எடப்பாடியில் 4 பெண்கள் தற்கொலைக்கு முயற்சி
- அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
- நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சி 24-வது வார்டுக்கு உப்பட்ட, ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில், சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் சித்ரா (37), பெருமாயி (57), பத்மா (23), அமுதா (33) ஆகிய 4 பெண்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆவேசமாக அப்பகுதியில் ஓடி வந்தனர். இதனால், அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.
சமாதான பேச்சுவார்த்தை
இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதுடன், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த எடப்பாடி தாசில்தார் லெனின் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.