உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது

Published On 2023-10-28 08:54 GMT   |   Update On 2023-10-28 08:54 GMT
  • நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு
  • தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஊட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வருகிற 4-ந் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பும் முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்குகின்றனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே 8-ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் இலவசமாக பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் சார்பில் இலவச பயிற்சி க்கான பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோ ருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கடன் குறித்த வழிகாட்டுதல் ஆகிய நிகழ்வுகளும் நடக்க உள்ளன.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

எனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

மேலும் இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படுபவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஊட்டி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News