ஊட்டியில் சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
- உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.
- தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.
இதன்படி, ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கோவை திட்டங்கள் உதவிப் கோட்டப் பொறியாளர் உமா சுந்தரி மற்றும் உதவிப் பொறியாளர்கள் விக்னேஷ்ராம், ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. இதில் சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவிப் பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.