உள்ளூர் செய்திகள்

உடன்குடி பஜாரில் மூதாட்டியிடம் பழைய 10 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த வியாபாரி - செல்லாது என கூறி வாக்குவாதம்

Published On 2023-09-07 08:52 GMT   |   Update On 2023-09-07 08:52 GMT
  • உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார்.
  • பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

உடன்குடி:

உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார். பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அப்போது அந்த கடையில் இருந்த வாலிபர் இந்த ரூபாயை நான் பார்த்ததே இல்லை. இது செல்லாத ரூபாய் நோட்டுகள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேறு ரூபாய் நோட்டுக்கள் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

உடனே அந்த மூதாட்டி, இது நமது இந்திய அரசு வெளியிட்ட பணம் தான் என்று சொல்லியும் கடையில் இருந்த வாலிபர் வாங்க மறுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த சிலர் இந்த பணம் செல்லும் என்றும், சிலர் சொல்லாது என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். எனினும் அந்த மூதாட்டியிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. பின்னர் ரூ. 50 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News