ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி
- ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானர்
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள கருக்கை கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம் டி.வி.புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனக சபை மகன் ஜெகதீசன் (வயது 45) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பாவாடை மகன் பழமலை (40) என்பவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் மயிலாடுதுறை சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது கார் கருக்கை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையில் முன்பு சென்ற ஜெகதீசன், பழமலை இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் ஜெகதீசன், பழமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.