அரியலூர்,
அரியலூர் அருகே உள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழா பள்ளியின் தலை மையாசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையாளர் முருகானந்தம் பேசும் போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிகவும் அவசியமானது. உலகில் தற்பொழுது 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை . உணவு, உடையை கூட உற்பத்தி செய்யும் மனிதனால் நீரை உற்பத்தி செய்ய முடியாது. எனவே அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டுச் செல்ல நாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும். தண்ணீரை வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில், குடிநீரை ஆறு, ஏரி, அருவி, குளம் போன்ற இடங்களில் எடுத்த மனிதன் இன்று பாட்டில்களிலும் தண்ணீர் கேன்களிலும் பெறுகிறான். அடுத்த தலைமுறைக்கு ஆறு , குளம் என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு இன்று ஆறு குளங்கள் காணாமல் போய்விட்டன.நாகரிக மோகம், தொழிற்சாலைகள் அதிகப்படியான நீர் பயன்பாடு போன்றவற்றால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது . எனவே அடுத்த தலைமுறைக்கு குடிநீரை விட்டு செல்ல வேண்டுமென்றால் மக்கள் ஒவ்வொருவரும் இணைந்து கண்ணில் படும் இடங்களில் எல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும், நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.