தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து- பள்ளி மாணவி பலி
- ஆட்டோ மில்லர்புரம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டூவிபுரம் வி.வி.டி. மெயின்ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி.
இவரது மனைவி சுப்புலெட்சுமி (வயது 37). இவர்களுக்கு மஞ்சு (16), ஹரிஷா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹரிஷா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கோரம்பள்ளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார், சுப்புலெட்சுமி, மஞ்சு, ஹரிஷா மற்றும் ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுதா பிரியா( 21) ஆகியோர் ஒரு ஆட்டோவில் நேற்று சென்றனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர். ஆட்டோ மில்லர்புரம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பயணிகள் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹரிஷா மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.