பாளை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு - கோவிலில் உண்டியலை உடைக்க முயற்சி
- கூலி தொழிலாளிகளான கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டு பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
- பாளை கீழநத்தம் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி பூசாரி கோவிலுக்கு சென்ற போது, அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
நெல்லை:
பாளை அருகே உள்ள உடையார்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி மகராசி (வயது 31).
திருட்டு
கூலி தொழிலாளிகளான கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டு பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணமும் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் மகராசி புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
பாளை கீழநத்தம் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி பூசாரி கோவிலுக்கு சென்ற போது, அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்வாகி கோபால் (50) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.