ஊட்டியில் கார் கவிழ்ந்து விபத்து; கேரள சுற்றுலா பயணிகள் 6 பேர் காயம்
- நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்
- கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதுமே நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சஜி மற்றும் திவ்யா ஆகியோர் தங்களது குடும்பத்தினர் 6 பேருடன் கார் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஊட்டி காமராஜர் சாகர் அணையை பார்வையிட சென்றனர்.அப்போது காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினர்.இதை பார்த்த பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.