உள்ளூர் செய்திகள் (District)

கிருஷ்ணகிரி-குப்பம் செல்லும் பேருந்துகளை மகாராஜாகடை வழியாக இயக்க வழக்கு

Published On 2023-02-27 09:50 GMT   |   Update On 2023-02-27 09:50 GMT
  • அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 கிருஷ்ணகிரி, பிப்.27-

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள குப்பம் வரை மகாராஜாகடை வழியாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

42 கிலோமீட்டர் தூரமுள்ள வழத்தடத்தில் 40 கிராம மக்கள் பயனடையும் வகையில் மகாராஜாகடை வழியாக பேருந்துகளை இயக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏறத்தாழ 9 கிலோமீட்டர் தூரம் குறைகிறது என்பதற்காக, 40 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பேருந்து வசதி இல்லாமலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசிடம் அனுமதி பெற்ற வழித்தடத்தில் பேருந்துகளை இயக்காதது குறித்து அரசு நிர்வாகங்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வரை அரசிடம் அனுமதி வழங்கிய மகாராஜாகடை வழியாக மட்டுமே தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News