உள்ளூர் செய்திகள் (District)

உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

Published On 2023-05-26 09:19 GMT   |   Update On 2023-05-26 09:22 GMT
  • சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
  • உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வடவள்ளி,

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த 24-ந் தேதியில் இருந்து இன்று வரை நடைபெற்றது.

கருத்தரங்கின் ஒரு அங்கமாக உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெயின் செயல்பாடுகளை எவ்வாறு சிறப்பாக செயல்பட செய்வது என்பதை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெனி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி, உழவர் உற்பத்தியாளர்கள் மற்றும் கம்பெனி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்திய நாடு 50 சதவீதத்திற்கு மேல் வேளாண்மை தொழிலை சார்ந்தே உள்ளது. அப்படி பட்ட நாட்டில் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டுமே நம் நாட்டை வளம் பெறும் நாடாக மாற்ற முடியும்.

உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்ய மத்திய அரசு 7 அம்ச உத்திகள் மற்றும் வேளாண்மை 4.0 கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

உழவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய மத்திய அரசு தற்போது உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளை நாடு முழுவதும் உழவர்களின் துணையோடு உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பை விவசாய பெருமக்கள் நல்வழியில் பயன்படுத்தி சந்தை சார்ந்த வேளாண் உத்திகளை கடைபிடித்து உழவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை எவ்வாறு வெற்றிகரமான அமைப்பாக செயல்படுத்த அதற்கான வெற்றியின் உத்திகளை பற்றி உழவர்களிடையே கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கவர்னர் முன்னிலையில் 10 உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் கவர்னர் சிறுதானிய தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்ட்ட பொருட்களின் கருத்துக்காட்சி மற்றும் விற்பனை அரங்கத்தை பார்வையிட்டார்.

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன், முன்னோடி உழவர்கள், உழவர்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் உறுப்பினர்கள், தொழில்முனைவோர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News