திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
- வருகிற 7-ந் தேதி தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் 4 வீதிகள் வழியாக வந்து நிலையடிக்கு சென்றது.
தொடர்ந்து, வருகிற 6-ந்தேதி சப்தஸ்தான விழாவும், 7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்கு டன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.