உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு :சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு செய்யும் பணிக்கு அரசியல் கட்சியினர், பொது மக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2023-05-04 09:21 GMT   |   Update On 2023-05-04 09:21 GMT
  • இங்கு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதாலும் சாலைகள் அகலப்படுத்தாமல் இருப்பதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு .வருகின்றனர்.
  • பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

கடலூர்:

கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.  இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடந்த 2019 -ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அதற்கான குறியீடுகள் வரைந்தனர் . ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக தற்போது சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதால் சாலைகள் அகலப்படுத்தாமல் வழக்கமாக இருப்பது போல் சாலைகள் இருந்தால் வாகனங்கள் எப்படி செல்வது? இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீண்டும் 4 சர்வேயர்கள் அனுப்பி புதிதாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இன்று காலை 4 சர்வேயர்கள் நெல்லிக்குப்பத்திற்கு வந்தனர். அப்போது நெல்லிக்குப்பம் நகர சர்வேயர் கொண்டு மீண்டும் அளவீடு செய்யப் போவதாக தெரிவித்தனர் . அப்போது முன்னாள் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் , நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன் த.வா.காநகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், பாரதீய ஜனதா வேலாயுதம், தி.க. இளங்கோ , கவுன்சிலர் புனிதவதி மற்றும் பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை தொடர்பாக உங்கள் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த 4 சர்வேயர்கள் தற்போது அளவீடு செய்கிறோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்து அளவீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News