தொடர் மழை எதிரொலி : முழுகொள்ளளவை எட்டும் வைகை அணை நீர்மட்டம்
- வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- 71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகர குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்தது.
71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 781 கனஅடிநீர் வருகிறது. 69 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.
66 அடியை எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 68.50 அடியில் 2-ம் கட்டமும், 69 அடியாக உயர்ந்தபின்னர் 3-ம் மற்றும் இறுதி கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும்.
மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.85 அடியாக உள்ளது. 593 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 73 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
தேக்கடி 1.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 2, போடி 0.4, வீரபாண்டி 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வைகை அணை 3.6, வீரபாண்டி 3, ஆண்டிபட்டி 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.