அவதூறு வீடியோ:கிருஷ்ணகிரி எஸ்.பி. எச்சரிக்கை
- எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
- சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் இந்தியில், தனது சமூக வலைதள டிவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று இரவு பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
நான் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ் குமார் தாக்கூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.