தி.மு.க. அரசு கோவைக்கு புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
- தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
- கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கோவை,
அ.தி.மு.க சார்பில் கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், சுகுணாபுரம், சுண்டக்காமுத்தூர், மதுக்கரை ஆகிய இடங்களில் நீர்-மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
குனியமுத்தூரில் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நீர்-மோர் பந்தல் அருகே அம்பேத்கரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டம், மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் போடுவது போன்ற அனைத்து திட்டங்களுமே மெதுவாக நடந்து வருகிறது.
மேலும் கோவைக்கு புதிதாக எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. எனவே கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது எந்த ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட வில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறிகிறார். அவை எல்லாம் வெளியே தெரிவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.