வேதாரண்யத்தில் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வழங்கப்படும்; நகர்மன்ற தலைவர் உறுதி
- சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
- ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
கடைவீதிகளிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலை பகுதிக்கு கொண்டுவிட்டு, அதன் செலவையும் வசூலித்து அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து நகர மன்ற தலைவர் பேசுகையில்:-
வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது தமிழக அரசால் தலைஞாயிறு பகுதிக்கு ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதில் வேதாரண்யம் நகராட்சியையும் இணைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வரும் 2 ஆண்டுகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.
மேலும் தற்போது உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.