உள்ளூர் செய்திகள்

பண்ணாரியம்மன் கோவில் விழாவையொட்டி இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் நடனமாடிய பக்தர்கள்.

குண்டம் இறங்க 2 நாட்களாக இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்கள்

Published On 2023-04-02 09:45 GMT   |   Update On 2023-04-02 09:45 GMT
  • ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
  • இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.

மேலும் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட கர்நாடகா மாநில பக்தர்களும் பலர் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

இதேபோல் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் கார், வேன், பஸ்களில் வந்து செல்கிறார்கள்.

இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சென்றது.

இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

இதையடுத்து கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து தினமும் இரவு கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குண்டத்துக்கு தேவையான எரி கரும்புகளை (விறகுகள்) காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது. முன்னதாக நாளை (திங்கட்கிழமை) இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எரிகரும்புகள் பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது.

விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள்.

மேலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கோவிலுக்கு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இதே போல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குண்டம் இறங்குவதற்காக சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள், வனப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக வேன், லாரிகளில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் தங்கி இடம் பிடித்து காத்திருக்கிறார்கள்.

மேலும் தடுப்புகளில் வேட்டி, துண்டுகளை போட்டு தங்கள் கும்பத்துடன் வரிசையில் குண்டம் இறங்குவதற்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News