வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் புகார்
- சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.
- நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர், திருவாரூர், காங்கேயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் துனிசியா நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது.
அங்கு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என கூறி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினர்.
அனைவரிடம் வசூலித்த பணம் பல லட்சங்களை தாண்டும்.
ஆனால் பல மாதங்களாகியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
அவர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை.
சில நாட்களில் அனுப்பி விடுவோம் என தட்டி கழித்து வந்தனர்.
இதனால் பணத்தையும் கொடுத்து வேலைக்கும் செல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம்.
எனவே அந்த 3 பேர் கூறிய வெளிநாட்டில் வேலை உள்ளது உண்மைதானா என்று விசாரிக்க வேண்டும்.
மேலும் அவர்களிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.