உள்ளூர் செய்திகள் (District)

வாடிக்கையாளர் விருப்பமின்றி இன்சூரன்ஸ் கட்டணம் வசூலித்த அரசு வங்கிக்கு ரூ.1.67 லட்சம் அபராதம்

Published On 2022-12-05 08:06 GMT   |   Update On 2022-12-05 08:06 GMT
  • சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு அரசு வங்கி ஒன்றில் கடந்த 2010 -ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் வீட்டுக்கடன் பெற்றார்.
  • சொத்து அடமான வைத்தவர்கள் விரும்பினால் மட்டுமே பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் செய்வது நடைமுறையாகும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படைவீடு அருகே உள்ள பச்சம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சந்திரமதி . இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு அரசு வங்கி ஒன்றில் கடந்த 2010 -ம் ஆண்டு ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் வீட்டுக்கடன் பெற்றார் . பின்னர் கடன் தொகை முழுமையாக செலுத்தி விட்டதால் கடந்த 2016 -ம் ஆண்டில் கடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே சந்திரமதி கடந்த 2011 -ம் ஆண்டு லாரி வாங்க, அந்த வங்கியில் ரூ.20 லட்சம் கடனாக பெற்றார்.அப்போது வங்கியில் சொத்து ஆவணம் இருப்பதால் வேறு ஆவணம் தேவையில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்தது. கடன் முழுவதையும் கட்டிவிட்டு வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்த போது கடனுக்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 வங்கி வசூல் செய்து கணக்கை முடித்துள்ளது தெரியவந்தது.

சொத்து அடமான வைத்தவர்கள் விரும்பினால் மட்டுமே பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் செய்வது நடைமுறையாகும். ஆனால் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சொத்து அடமானத்தில் இருக்கும் போது வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக தேவை இன்றி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 இன்சூரன்ஸ் பிரிமியத்திற்காக பிடித்தம் செய்து கூடுதலாக செலவு வைத்துள்ளனர்.‌

இதுகுறித்து வாடிக்கையாளர் கேட்டபோது வங்கி நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயணிட்டாளர் சங்கத்தில் சந்திரமதி புகார் கொடுத்தார். சங்க செயலாளர் சுப்பராயன் இது குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், வாடிக்கையாளர் விருப்பமின்றி இன்சூரன்ஸ்சிற்காக வங்கியில் வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு முழுமையாக திருப்பி வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ. 50,000 வழங்கவும், வழக்கு தொகையாக ரூ.5000 கூடுதலாக வழங்கவும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அரசு வங்கி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 40 வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News