உள்ளூர் செய்திகள் (District)

குன்னூரில் பலத்த மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-08-16 09:15 GMT   |   Update On 2024-08-16 09:15 GMT
  • சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
  • குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றும் மழை நீடித்தது.

காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இன்று அதிகாலை குன்னூரில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் எம்.ஆர்.சி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் மண் திட்டுகள் இருக்கும் பகுதிகளில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News