உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே ஆலையில் தீ விபத்து

Published On 2024-08-20 05:48 GMT   |   Update On 2024-08-20 05:48 GMT
  • தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
  • விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் எஸ். ராமலிங்கபுரம் சாலையில் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் ஜெயபாலன் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் மருத்துவ துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து கிரே கிளாத் எனப்படும் மருத்துவ துணியை வாங்கி தனது ஆலையில் அதனை சலவை செய்து வெண்மையாக மாற்றி வழங்கி வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவில் ஆலையில் கிரே கிளாத் பண்டல்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே அறையில் 100-க்கும் மேற்பட்ட பண்டல்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் ஒரு பகுதியில் பற்றிய தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News