குறிக்கோளுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்- மாணவிகளுக்கு நீலகிரி கலெக்டர் அருணா அறிவுரை
- ஊட்டி அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
- அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அருணா நிகழ்ச்சியில் பேசியதாவது:-
மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.
படித்து முடித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம் என நினைக்காமல் எந்த வேலைக்கு போக வேண்டும் என தீர்மானித்து விட்டு, அந்த குறிக்கோளை எட்டும் வகையில் படிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமை, தைரியம், சுய ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் வாழ்க்கையில் நாம் விரும்பிய இலக்குகளை எளிதில் எட்ட இயலும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காப்பகத்தில் உள்ள சமையலறை, விடுதி அறைகள் மற்றும் உணவு பொருட்கள் வைப்பறை ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஹேமந்த்ரோச் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.