உள்ளூர் செய்திகள் (District)

திருவாரூரில், பள்ளி மாணவிகள் மாயம்

Published On 2023-09-01 08:21 GMT   |   Update On 2023-09-01 08:21 GMT
  • 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை.
  • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் நகரத்திற் குட்பட்ட வடக்கு வீதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திருவாரூர், கேக்கரை, சேர்ந்தமங்கலம், கொடிக்கால் பாளையம், விளமல், வாள வாய்க்கால், புலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் இந்தப் பள்ளியில் பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற மாணவிகள் தங்கி படிக்க கூடிய விடுதியும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் இந்த விடுதியில் தங்கி படிக்கும் வேலங்குடி மற்றும் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் இருவர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றில் மாணவிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News