குமரி மாவட்டத்தில் 30 நாட்களுக்கு பிறகு ரப்பர் தோட்ட தொழிலார்கள் இன்று பணிக்கு திரும்பினர்
- ரூ.40 ஊதிய உயர்வு வழங்கப்படும்
- அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை என 4 கோட்டங்களாக ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்க 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஓப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை செயல்படுத்த ரப்பர் தோட்டக் கழகம் தாமதம் செய்ததால், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் 7-ந் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், தொழிற்சங்க த்தினருடனான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடை பெற்றது. நள்ளிரவை தாண்டியும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
அதன்படி ரூ.40 ஊதிய உயர்வு உள்பட அடிப்படை ஊதியமாக பால்வடிப்பு தொழிலாளர்களுக்கு ரூ.343-ம், களப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.328-ம், தொழிற்கூட தொழிலாளர்களுக்கு ரூ.338.74-ம் கிடைக்கும். மேலும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதிக்கு முன்பும், 2-ம் தவணை வருகிற 23-ந் தேதிக்கு முன்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பணியா ளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அவர்கள் 7-ந் தேதி (இன்று) முதல் வேலைக்குச் செல்வதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை அவர்கள் பணிக்கு வந்தனர். 30 நாட்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.