இரணியல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு
- கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது துணிகரம்
- போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி குதிரை பந்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சுபழம். இவரது மனைவி சுந்தர பாய் (வயது 68).
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து லெட்சுமிபுரம் அம்மச்சிமடம் பகுதியில் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சுந்தரபாய் பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். இரணியில் அருகே பரசேரி பகுதியில் பஸ்சை விட்டு இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 13 பவுன் நகையை காணவில்லை.
சுந்தர பாய் நகையை தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சுந்தர பாய் சென்று வந்த கோவில்களுக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுந்தர பாய் கழுத்தில் நகை கிடந்தது தெரிய வந்தது.
எனவே ஓடும் பஸ்சில்தான் அவரிடம் யாரோ கைவரிசையை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.