உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2022-08-05 07:45 GMT   |   Update On 2022-08-05 07:45 GMT
  • அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • பள்ளி மற்றும் கல்லூரி, மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் அதனை தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர். குறிப்பாக குமரி - கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் அதிக அளவில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தில் விடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதில் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் பகுதியை சேர்ந்த அம்மகுடிவிளை விளை ஜெகன் (வயது 30) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (31) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பொட்டலத்தில் 10 கிராம் கஞ்சாவும், இன்னொரு பொட்டலத்தில் 15 கிராம் கஞ்சாவும் என 25 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News