உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுமி சாவு

Published On 2023-05-06 07:19 GMT   |   Update On 2023-05-06 07:19 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நவீன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
  • குழந்தை பலியான சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி :

நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி தெற்கு வள்ளியாவிளையை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் நவீன் (வயது 23). என்ஜினீயரிங் மாணவரான இவர், கடந்த 30-ந்தேதி தனது உறவினர் ரமேஷின் மனைவி அஜிதா (37), அவரது மகள்கள் ரக்சனா (13), லாவனீஸ் (11) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குளச்சல் பள்ளிமுக்கு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த போது, வெட்டுமடை பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நவீன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமிகள் லாவனீஸ், ரக்சனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நவீன், அஜிதா குளச்சல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி ரக்சனா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். அவரது சகோதரி லாவனீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை பலியான சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த பாலப்பள்ளம் படுவூரை சேர்ந்த இனிகோ சகாய ராஜ் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News