களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் படுகாயம்
- திடீரென லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை பகுதியை ேசர்ந்தவர் சஜின், டிரைவர்.
இவர் நேற்று இரவு குழித்துறையில் இருந்து களியக்காவிளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.படந்தாலுமூடு பகுதியில் சென்ற போது. எதிரே ஒரு லாரி வந்தது.
அந்த லாரியை அருமனையை சேர்ந்த அனில் ஓட்டி வந்துள்ளார். திடீரென லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில், சஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.