சுங்கான்கடை அருகே கார் மோதி டிரைவர் பலி
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 44), ரோடு ரோலர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபிதா (40). இவர்களுக்கு சுஜன் (15) என்ற மகன் உள்ளார்.
நேற்று காலை ஹரி வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தக்கலை பகுதியில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.
நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று ஹரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.
இதில் தூக்கி வீசப்பட்ட ஹரி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கடந்த ஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஹரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.