உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா "பாக்கும்படி" நிகழ்ச்சி

Published On 2023-11-05 07:16 GMT   |   Update On 2023-11-05 07:16 GMT
  • திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
  • 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 15-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர் அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகு மரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்ப ணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணை தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய 2 தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில் இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டுவிடப்பட்டது.

Tags:    

Similar News