உள்ளூர் செய்திகள்

வியாபாரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

Published On 2023-04-30 07:18 GMT   |   Update On 2023-04-30 07:18 GMT
  • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
  • 2 வாலிபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு

கன்னியாகுமரி:

ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30).வியாபாரி இவர் ராமன் புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி பிரேம் ஆனந்த் மற்றும் அவரது அக்காவின் கணவர் ஆனந்த் இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தட்டான்விளை பார்க் ரோட்டை சேர்ந்த சஞ்சய், புன்னைநகர் ஹோலி கிராஸ் ரோட்டை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் பழம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த நவீன்குமார், சஞ்சய் இருவரும் பிரேம் ஆனந்த், ஆனந்த் இருவரையும் தாக்கினார்கள். மேலும் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றி தீ வைத்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தீக்காயம் அடைந்த பிரேம் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நேசமணிநகர் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நவீன் குமார், சஞ்சய் இருவர் மீதும் கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

இருவரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் நவீன்குமார், சஞ்சய் இரு வரும் தலை மறைவாகி விட்டனர்.

Tags:    

Similar News