உள்ளூர் செய்திகள் (District)

கருட சேவை நடந்த காட்சி.

பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவிலில் கருடசேவை

Published On 2023-03-23 08:57 GMT   |   Update On 2023-03-23 08:57 GMT
  • கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
  • இரவு 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.

தென்திருப்பேரை:

தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6-வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.

5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல், 8.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடந்தது. 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து தீபாரா தனை நடைபெற்றது.

நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத் சுவாமிகள் அண்ணா வியார் பாலாஜி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம் பிச்சைமணி சுந்தர நாராயணன் ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 29, 30-ந்தேதி புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் செய்கின்றனர்.

Tags:    

Similar News