கிருஷ்ணராயபுரம் அருகே மின்கம்பியை மிதித்த முதியவர் சாவு
- கிருஷ்ணராயபுரம் அருகே மின்கம்பியை மிதித்த முதியவர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் சடையன் (வயது 73). இவரது மனைவி செல்லம்மாள் (68). இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் காலை வயல் வெளிக்கு செல்வதற்காக இருவரும் நடந்து செல்லும் போது பாதையில் ஏற்கனவே அறுந்து கிடந்துள்ள மின் கம்பியை எதிர்பாராமல் மிதித்துள்ளனர். இதில் சடையன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி செல்லம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த லாலாபேட்டை போலீசார் சடையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.