உள்ளூர் செய்திகள் (District)

கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒடிசா வாலிபர் பலி

Published On 2022-08-12 09:27 GMT   |   Update On 2022-08-12 09:27 GMT
  • கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒடிசா வாலிபர் பலியானார்.
  • ஒருவருக்கு பலத்த காயம்

கரூர்

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூரில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் ஒடிசா மாநிலம் என்ஜாரன் சுந்தர் கார்த் பகுதியைச் சேர்ந்த சுதீப் மின்ஸ் (வயது 21 ),ஒடிசா சுந்தர் கார்த் ரால்டேகா பகுதியைச் சேர்ந்த சலீம் பெக் (24) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அந்த குவாரியில் இரவு பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதை யடுத்து சுதீப் மற்றும் சலீம் ஆகிய இருவரும் டிராக்டர் எடுத்துக்கொண்டு குவாரியின் தரைப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக 60 அடி உயரத்திலிருந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் சுதீப் , சலீம் ஆகிய இருவரும் இடுப்பாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதீப் மின்ஸ் பரிதாபமாக இறந்தார். சலீமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தென்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து ஒடிசா வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News