சரக்கு ஆட்டோ மீது கார் மோதி பெண் பலி
- கரூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி பெண் பலியானார்
- படுகாயம் அடைந்த கணவர், குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை
வே.பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது28). இவரது மனைவி சத்யா (22). இவர்களுக்கு நித்யாஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். இவர்கள் சரக்கு ஆட்டோவில் தர்பூசணி பழத்தை ஊர்ஊராக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சந்தோஷ் தனது மனைவி சத்யா, குழந்தை நித்யா ஸ்ரீயுடன் சரக்கு ஆட்டோவில் தர்பூசணி பழங்களை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்துவிட்டு பொத்தனூரில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதியது . சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சென்டர் மீடியாவில் மோதி குப்புற கவிழ்ந்தது . இதில் சந்தோஷ் சத்யா , குழந்தை நித்யா ஸ்ரீ ஆகிய மூவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சந்தோஷ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.