உள்ளூர் செய்திகள் (District)

ராமசெட்டிபாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Published On 2023-04-23 09:02 GMT   |   Update On 2023-04-23 09:02 GMT
  • நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது.
  • மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.

கோவை,

கோவை சுண்டாக்காமுத்தூர் ராமசெட்டியாளையத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி காலை 8 மணியளவில் பொன்னப்பசெட்டியார் தோட்டத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், விமான கலசங்கள் ஊர்வலம், இரவு 7 மணிக்கு முதலாம் கால யாக பூஜை நடந்தது.

நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 6 மணியளவில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவிலின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையடுத்து காலை 8.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடந்தது. கும்பாபிஷேக விழா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது.

காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, 10.30 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வழிபாடும், இரவு 8 மணிக்கு வீடும், நாடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா? பெண்களின் உழைப்பா? என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

விழாவில் மாநகாரட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர்கள் தென்றல் முருகேசன், குனிசை செந்தில்குமார், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முருகன் தலைமையிலான கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News