உள்ளூர் செய்திகள்

கோவையில் தீபாவளிக்கு ஆடம்பர டி.வி-கார் விற்பனை அதிகரிப்பு

Published On 2022-10-30 09:07 GMT   |   Update On 2022-10-30 09:07 GMT
  • பட்டாசு, துணி விற்பனை குறைவு என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
  • ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கோவை,

ெகாரோனா நோய்தொற்று பரவலுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆடம்பர பொருட்கள் குறிப்பாக டி.விக்கள், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் கார் விற்பனையாளர்கள் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பர சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது தவிர சிறிய ரக கார்கள் விற்பனையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியார் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறும்போது,

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக லட்டு, ஜிலேபி, பாதுஷா, மைசூர்பா உள்ளிட்ட இனிப்பு வகைகள் மிக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. பால் இனிப்பு வகைகளுக்கு வழக்கமான வரவேற்பு காணப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இனிப்பு வகைகள் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

தனியார் எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பெரிய 55, 43, 65, 75 இன்ச் எல்.இ.டி டிவிக்கள் மற்றும் ஆடம்பர டிவிக்கள் விற்பனை அதிகரித்தது. இவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையாகும். இது தவிர ஆடம்பர மாடல் பிரிட்ஜ் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ1.2 லட்சம் வரை, வாஷிங் மெஷின் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை. சிறிய பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், கேஸ் அடுப்பு, விற்பனையும் நன்றாக இருந்தது. கடந்தாண்டு போலவே விற்பனை இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதால். விற்பனை சராசரி அளவில் தான் இருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதேபோன்று விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு விற்பனையை விட 20 சதவீதம் குறைவாகவே ஜவுளிப்பொருட்கள் விற்பனையாகி உள்ளது.

மொபைல் போன்கள் தள்ளுபடியை வைத்தே விற்பனை நடைபெற்றது. இதனால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான மொபைல்போன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. 

Tags:    

Similar News