உள்ளூர் செய்திகள் (District)

மதுரையில் வெள்ள நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் மூர்த்தி

Published On 2024-10-26 01:52 GMT   |   Update On 2024-10-26 03:55 GMT
  • மதுரையில் 9.8 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியுள்ளது.
  • மழை நீர் வடியாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் அளவிற்கு பேய் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளம் குறித்து பி. மூர்த்தி கூறுகையில் "ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. செல்லூரை பொறுத்தவரையில் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் வரும் காரணத்தினால் செல்லூரில் இருந்து வைகையில் தண்ணீர் நேரடியாக செல்வதற்கான வேலை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

அதற்காக மூன்று டிரான்ஸ்பார்மர்கள் மாற்ற வேண்டிய நிலை உள்ளது. மின்சாரத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக சொல்லி அந்த வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநகராட்சி, ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைகள் துரித நடவடிக்கை எடுத்து ஓரிரு நாட்களில் அனைத்து பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்குள் மொத்தமும் சரி செய்யப்படும். முதலமைச்சர் சொல்வதற்கு முன்பாகவே பணிகளை துவங்கிவிட்டோம்" என்றார்.

Tags:    

Similar News