உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டினர் வருகை: தாஜ்மகாலை பின்னுக்குத்தள்ளிய மாமல்லபுரம்

Published On 2022-10-01 02:25 GMT   |   Update On 2022-10-01 02:25 GMT
  • இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினரில் 45.5 சதவீதத்தினர் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
  • தாஜ்மகாலுக்கு வந்தவர்கள் 12.21 சதவீதத்தினர் ஆவார்கள்.

சொர்க்கமே என்றாலும்

அது நம்மூரைப் போல வருமா?

- 'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தில் கங்கை அமரன் எழுதி இளையராஜா, எஸ்.ஜானகி பாடிய பாடலைக் கேட்கிறபோது, நம்முள் சிலிர்க்குமே அது உண்மைதான்.

ஆமாம், தாஜ்மகால் என்ற உலக அதிசயத்துடன் ஒப்பிடுகையில் நம்ம ஊரு மாமல்லபுரம் அதிக பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி அசத்தி இருக்கிறது என்றால் நம்புகிறீர்களா?

உண்மைதான்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் சுற்றுலா தலங்கள் எல்லாம் 'அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல' ஆள் அரவமற்றுப்போயின.

ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 2021-22 நிதி ஆண்டில் இந்திய சுற்றுலா தலங்களைப் பார்க்க உலகமெங்கும் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வந்திருக்கிறார்கள்.

அதுவும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி பார்க்கிற நினைவுச்சின்னங்களில் தாஜ்மகாலை நமது மாமல்லபுரம் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது என்ற தகவல் மனதுக்குள் சாரலாகிறது.

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள், பல சுவாரசியங்களை அள்ளித்தந்திருக்கின்றன.

அதில் இருந்து சில துளிகள்:-

* ஓராண்டில் சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற மாமல்லபுரம் வந்து அங்குள்ள குடைவரைக்கோவில்கள், ரதங்கள், சிற்பங்கள் என பார்த்து ரசித்துச் சென்றுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 ஆகும்.

* இதே காலகட்டத்தில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் வீற்றிருக்கும் காதல் நினைவுச்சின்னமான தாஜ்மகாலை கண்டு களித்துச் சென்ற வெளிநாட்டவரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 922.

* முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் இன்னும் 4 நினைவுச்சின்னங்கள் உண்டு. அவை:-

• சாளுவன்குப்பம் முருகன் கோவில் (மாமல்லபுரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புலி முகத் தோற்றம் கொண்ட இந்தக் கோவில் 2005-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டதாகும்.) இங்கு 25 ஆயிரத்து 579 வெளிநாட்டினர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.

• செஞ்சிக்கோட்டை. இது இந்தியாவில் உள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது என மராட்டிய மாமன்னர் சிவாஜியினால் பாராட்டப்பட்டதாகும். இங்கு 10 ஆயிரத்து 483 வெளிநாட்டினர் வந்து வியந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள்.

• திருமயம் மலைக்கோட்டை மியூசியம். 8,422 வெளிநாட்டினர் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

• சித்தன்னவாசல் சமணர்கள் குகைக்கோவில். (புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது. ) இங்கு 5,432 பேர் வந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினரில் 45.5 சதவீதத்தினர் மாமல்லபுரம் வந்துள்ளனர். தாஜ்மகாலுக்கு வந்தவர்கள் 12.21 சதவீதத்தினர் ஆவார்கள்.

இந்தியாவின் கலாசார தலைநகரம் தமிழ்நாடு என்பதற்கு இந்த தரவுகளே சான்றாக அமையும்.

Tags:    

Similar News