உள்ளூர் செய்திகள் (District)

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை: சென்னை வாலிபர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-04-20 12:23 GMT   |   Update On 2023-04-20 12:23 GMT
  • படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

மேலூர்:

சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் நிலத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு.

அதன்படி சம்பவத்தன்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே கண்ணனை கொலை செய்து காரில் தப்பிய கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கும், கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெகதீஷ் (வயது 28), அவரது ஆதரவாளர்கள் வினோத், மில்டன் உள்பட 5 பேர் கண்ணணை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட மேலும் 2பேர், ஏற்கனவே பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News