கலப்பட தேயிலை பயன்படுத்திய டீ கடைகளுக்கு அபராதம் விதிப்பு
- பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகள், மளிகை கடைகள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
- கலப்பட தேயிலை பயன்படுத்தியது கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஏ. பானுசுஜாதா உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான கனவனஹள்ளி, பூமரத்து பள்ளம், ஐந்தாவது மைல்கல், ஆத்துக்கொட்டாய், கரகூர் மற்றும் பெல்ரம்பட்டி பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள்,பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகள், மளிகை கடைகள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 5-க்கும் மேற்பட்ட கடைகளில் கலப்பட தேயிலை பயன்படுத்தியது கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேற்படி கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் வனஸ்பதி, ரவை, கடலை மாவு மற்றும் உரிய தயாரிப்பு தேதியில்லாத , லேபிள் விபரம் இல்லாத, முகவரி அச்சிடாத தின்பண்டங்கள் வைத்திருந்த இரண்டு மளிகை கடைகளுக்கு ஆயிரம் என இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மேம்பாட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் சில மளிகை கடைகள் மற்றும் பேக்கரிகளில் உரிய முகவரி இல்லாத குளிர்பானங்கள் மற்றும் காலாவதியான குளிர் பானங்கள் பறிமுதல் செய்து அழித்து எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
உரிய விபரங்கள் அச்சிடாத குளிர்பானங்களோ, தின்பண்டங்களோ, பொட்டலம், உணவு பொருட்களோ விற்பனை கூடாது எனவும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அனைவரும் வணிகம் செய்ய எச்சரித்து நோட்டீஸ் அளித்தார். மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.