உள்ளூர் செய்திகள் (District)

இரவு 9 மணிக்கு மேல் ஈரோடுக்கு பஸ் இல்லாததால் பொதுமக்கள் அவதி

Published On 2022-08-24 09:50 GMT   |   Update On 2022-08-24 09:50 GMT
  • ஈரோடுக்கு பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
  • இதனால் இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் பகுதி பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்ட நகரமாக விளங்குகிறது. இங்கு பணிபுரிய பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.இவர்கள் பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணிக்கும் மேல் ஆகிறது.

அந்த நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. குமாரபாளையத்தில் முன்பெல்லாம் இரவு 11 மணி வரைக்கும் ஈரோடுக்கு பஸ் சென்று வந்தது.

இப்போது இரவு 9 மணிக்கு மேல் பஸ் இல்லை.இரவு 9 மணிக்கு குமாரபாளையம் பஸ் நிலையத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் ஒரே நேரத்தில் வருகிறது. பயணிகள் ஏற முயற்சித்தால் பஸ்கள் டெப்போவிற்கு போகிறது, யாரும் ஏறாதீர்கள் என்று கூறிவிட்டு பஸ்களை எடுத்து சென்று விடுகிறார்கள்.

இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குமார பாளையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News