உள்ளூர் செய்திகள் (District)

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-19 06:47 GMT   |   Update On 2023-09-19 06:47 GMT
  • ருமாந்துறை ஈஸ்வரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஆடுதுறை, திருமாந்துறை நோவா நகர்மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News