உள்ளூர் செய்திகள் (District)

கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம்-விவசாயிகளுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அழைப்பு

Published On 2022-12-28 06:39 GMT   |   Update On 2022-12-28 06:39 GMT
  • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் வழங்கபடுகிறது
  • பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காளான் குடில் அமைக்க ஒரு லட்சம் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திட 20 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கீழமாத்தூர், அல்லிநகரம், இரூர், காரை, நக்கசேலம், நாரணமங்கலம், எளம்பலூர், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூர், பிரம்மதேசம், சிறுமாத்தூர், அகரம் சிக்கூர், எழுமூர், கீழப்புலியூர், கிழுமத்தூர், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராமங்களில் காளான் குடில் அமைக்க பொருள் இலக்காக 2 எண்கள் மற்றும் நிதி இலக்காக ரூ.2 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 600 சதுர அடி அளவுள்ள காளான் வளர்ப்பு கூடாரம் அமைக்க அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News