உள்ளூர் செய்திகள்
மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
- அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 5 -மணி அளவில் திடிரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக சாரல் மழை இடைவிடாது இந்த பகுதியில் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் அரியலூர் செல்லும் சாலையில் திடீரென மின்கம்பி அறுந்து விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் மின்கம்பி அருகே யாரும் வராமல் பார்த்துக் கொண்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த லப்பைக்குடிக்காடு மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சப்ளையை நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.