பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா
- பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது
- ஏராளமான பொதுமக்கள் மீன்களை அள்ளிச்சென்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரியகம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவிற்காக சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர்.பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி, போட்டியை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டுலாவகமாக மீன் பிடித்தனர். ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.