உள்ளூர் செய்திகள் (District)

நமணசமுத்திரத்தில் மழைக்கால மருத்துவ முகாம்

Published On 2022-12-01 09:15 GMT   |   Update On 2022-12-01 09:15 GMT
  • நமணசமுத்திரத்தில் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடந்தது

புதுக்கோட்டை

தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் மழைக்கால மருத்துவ முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தலின்படி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஹெச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் தற்போதைய காலக்கட்டத்தில் நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அனுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிரகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, உடல் வெப்ப அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News